சென்னை மாநகரில், ஓட்டுனர் உரிமம் பெறும் வயதை அடையாத பள்ளி மாணவ - மாணவியர் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது. விபத்து அசம்பாவிதங்கள் நிகழும் முன், பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் போக்குவரத்து போலீசாரும் தனி கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவ - மாணவியரை பெரும்பாலான பெற்றொர் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், பள்ளி மற்றும் தனியார் வேன், ஆட்டோ அல்லது சைக்கள் வாயிலாகவும் அனுப்பி வைப்பர்.ஆனால், வசதி படைத்த பெற்றோர் ஓட்டுனர் உரிமம் பெறாத பிள்ளைகளுக்கு பிறந்தநாள் பரிசாக இருசக்கர வாகனம் வாங்கி கொடுப்பதை பெருமையாக கருதுகின்றனர். அந்த வாகனத்தின் வாயிலாக, அருகில் உள்ள தெரு கடைகளுக்கு கொண்டு செல்வதையும் வழக்கப்படுத்துகின்றனர்.அடுத்து பள்ளிக்கும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர். ஆனால், ஆர்வக் கோளாறில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி, 'வீலிங்' செய்யும் சாகசத்தில் ஈடுபட செய்கின்றனர். இதன் வாயிலாக, சாலையில் செல்வோரை மிரள வைக்கின்றனர்.வாகனத்தில் வித்தியாசமாக, 'ஹாரன்'களை பொருத்தி பாதசாரிகளையும், மற்ற வாகன ஓட்டுனர்களையும் பதற்றமடைய செய்கின்றனர். விதிமுறைகளை சரிவர அறிந்து கொள்ளாமல், வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக கல்வித்துறைக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை பள்ளிக்கு, மாணவர்கள் ஓட்டி வரக்கூடாது என. கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை கண்டுகொள்ளாமல், சென்னை, புறநகரில் பள்ளி மாணவர்கள் டூ - வீலர்களில் வலம் வருவது தொடர்கிறது.
கடும் நடவடிக்கை அவசியம்
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சாலை விபத்துகளை குறைப்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய அம்சங்களைச் சேர்த்து, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.அதன்படி, 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அந்த வாகனத்தின் ஆர்.சி., எனும் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும். 25 வயது வரை, அவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது.பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் டூ - வீலரில் பள்ளிக்கு வர மாணவர்களை அனுமதிப்பது இல்லை. இதனால், வாகனங்களை ஓட்டிச் சென்று பள்ளிக்கு அருகே உள்ள இடங்களில் நிறுத்தி வகுப்புக்கு செல்கின்றனர். மாணவர்களின் விதிமீறலை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர். - -நமது நிருபர்- -