ஸ்கூட்டர் மோதி முதியவர் காயம் சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
சாலிகிராமம், சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய ஸ்கூட்டி மோதி முதியவர் காயமடைந்த சம்பவம் சிறுவன் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு பள்ளியில் சேர்க்கப்பட்டார். சாலிகிராமம், காந்தி நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சம்பத், 76; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர், கடந்த 11 ம் தேதி இரவு, அருகே உள்ள கடைக்கு சென்று, வீடு திரும்பினார். அப்போது, வேகமாக வந்த டி.வி.எஸ்., அக்சஸ் ஸ்கூட்டர், முதியவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தோர் மீட்டு, அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த பண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுவன், தனது தாயின் பெயரில் உள்ள வாகனத்தை ஓட்டிய போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று சிறுவனை கைது செய்த போலீசார், அவரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்ந்தனர். மேலும், சிறுவனின் தாய் மீது வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், வடபழனியில் சிறுவன் இயக்கிய கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். சிறுவர்கள் வாகனத்தை இயக்கி, விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர் சிறுவர்களிடம் வாகனங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.