கொட்டிவாக்கத்தில் மீன் அங்காடி திறப்பு
சென்னை:கொட்டிவாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கொட்டிவாக்கத்தில் சாலையை ஆக்கிரமித்து மீன் கடை நடத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; விபத்துகளும் அதிகரித்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தொகுதி மேம்பாட்டு நிதி, 80.65 லட்சம் ரூபாயில் கொட்டிவாக்கத்தில் மீன் அங்காடி கட்டப்பட்டது. தரை தளத்தில் - 28, முதல் தளத்தில் --- 21 என, மொத்தம் 49 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் திறந்துவைத்தார். மேலும், கோவிலம்பாக்கத்தில் எம்.பி., நிதி ஒரு கோடி ரூபாயில் சமூக நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 3,000 சதுர அடியில் கட்டப்படவுள்ள இந்த கட்டடம், 200 பேர் அமரும் வசதியுடன் கட்டப்படுகிறது.