மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
எண்ணுார்: எண்ணுார் கொசஸ்தலை ஆறு, முகத்துவார பகுதியில், மூன்று நாட்களுக்கு முன், டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகளால் தான் மீன்கள் இறந்ததாக, மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், எண்ணுார் முகத்துவாரத்தில் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பதை தடுக்கவும், அதற்கு காரணமான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சி.ஐ.டி.யு., - சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்கம் சார்பில் மீனவர்கள் 50 பேர் நேற்று, தாழங்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். டன் கணக்கில் மீன்கள் இறந்ததால், வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும், அதற்கான இழப்பீடு வழங்க கோரியும், மீனவர்கள் கோஷம் எழுப்பினர்.