வேளச்சேரியில் ரூ.3 கோடி நிலம் ஆட்டையை போட்ட ஐவர் கைது
சென்னை, செப். 18- வேளச்சேரியில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான காலிமனையை அபகரித்த, ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜயசாமுண்டீஸ்வரி, 59. இவருக்கு சென்னை வேளச்சேரி விஜயநகரில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 4,320 சதுரடி காலிமனை உள்ளது. அந்த இடத்தை சிலர், போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்துள்ளனர். இதை அறிந்த விஜயசாமூண்டீஸ்வரி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த நிலமோசடி புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் வரதராஜன், தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் பத்திர ஆவணங்கள் மற்றும் பணபரிவர்த்தனை விபரங்கள் வாயிலாக மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த யசோதா, 59 என்பவர் சொத்தின் உரிமையாளர் விஜயசாமூண்டீஸ்வரி போல ஆள்மாறாட்டம் செய்தது தெரிந்தது. அவருக்கு உடந்தையாக அயப்பாக்கத்தைச் சேர்ந்த பழனி, 43, வனிதா, 40 ஈடுபட்டதும், முகப்பேரைச் சேர்ந்த மேகனாதன், 49, அருணாச்சலம், 42 ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததும் தெரிந்தது. மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை நேற்று கைது செய்த போலீசார், போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரை, கமிஷனர் அருண் பாராட்டினார். --