வண்டலுாரில் 7டி தியேட்டர் திறப்பு வரையாடு கணக்கெடுப்பு வெளியீடு வனத்துறை அமைச்சர்
சென்னை, டிச. 19-சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று பார்வையிட்டார். அப்போது, 180 கி.வோ., திறன்கொண்ட சூரிய மின் நிலையத்தை திறந்து வைத்தவர், புதுப்பிக்கப்பட்டு வரும் விலங்கு கூடம், வேடந்தாங்கல் பறவை கூண்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.மேலும், பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்ப தோடு, அவை தொடர்பானதிரைப்படங்களை நவீன தொழில் நுட்பத்தில் பார்த்து ரசிக்கும் வகையில், 4 கோடி ரூபாய் செலவில், 32 இருக்கைகளுடன் '7டி' தொழில்நுட்ப தியேட்டர் கட்டப்பட்டு உள்ளது.இதை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி, அதில் அமர்ந்து விலங்குகள் தொடர்பான, 3 நிமிட திரைப்படத்தை பார்த்து ரசித்தார். தொடர்ந்து, நீலகிரி வரையாடுகளின் முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மற்றும் வரையாடு அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.தமிழக மாநில விலங்காகவும், அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகவும் உள்ள நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு, நீலகிரி வரையாடு திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இத்திட்ட பணிகள் 25.14 கோடி ரூபாய்செலவில், ஒன்பது முக்கியகூறுகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.முக்கிய அம்சமாக, முதல் முறையாக தமிழகம் மற்றும் கேரள வனத்துறை இணைந்து, வருடாந்திர ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்புமற்றும் அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகள், வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தாண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 1,031 வரையாடுகளும், தமிழகம் - கேரள எல்லையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில், 1,858 வரையாடுகளும் உள்ளன.கேரள இரவிக்குளம் தேசிய பூங்காவில் 827; முக்குர்த்தி தேசிய பூங்கா வில் 203; கிராஸ் ஹில்ஸ் பகுதியில் 276 வரையாடுகளும் உள்ளன. இதேபோல், ஒவ்வொருஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அமைச்சரின் வாகனம் முற்றுகை
வண்டலுார் பூங்காவில், 200க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் வேலை செய்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அவர்கள், ஆபத்தான விலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. இதனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என, தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வருவதை அறிந்த தினக்கூலி பணியாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, அமைச்சர் வந்ததும், அவரது வாகனத்தை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கைகளை கூறினர்.அப்போது அவர்கள், அமைச்சரின் காலில் விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கோரிக்கையை கேட்ட அமைச்சர் பொன்முடி, நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டுச் சென்றார்.