உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி மாஜிகாவலருக்கு 3 ஆண்டு சிறை உறுதி

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி மாஜிகாவலருக்கு 3 ஆண்டு சிறை உறுதி

சென்னை:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம், 2.16 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த, ஓய்வு பெற்ற காவலருக்கு, மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை உறுதி செய்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நாமக்கல்லைச் சேர்ந்தவர் கவிதா. இவர், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், 2011 நவ.,16ல் அளித்த புகார்:என் தம்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். அங்கு வரும்போது, சுப்பிரமணி என்ற காவலர் அறிமுகம் ஆனார். முதல்வர் பாதுகாப்பு பிரிவில் காவலராக உள்ளதாக கூறி, தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறினார். அதை நம்பி அவரிடம், 2010 ஜனவரில், 2.16 லட்சம் ரூபாய் கொடுத்தேன். உறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தராமல், கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இதையடுத்து, சுப்பிரமணி மீது, கொலை மிரட்டல், மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த, சைதாப்பேட்டை நீதிமன்றம், 'வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணி, காவல் துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர். அதை மறைத்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவில், முதல்வரின் பாதுகாவலராக உள்ளதாக கூறி, மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், புகார்தாரருக்கு, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.இதை எதிர்த்து, மாவட்ட 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணி மேல்முறையீடு செய்தார். போலீசார் தரப்பில், அரசு கூடுதல் வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி சி.உமா மகேஸ்வரி, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை