வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மூத்த குடிமக்கள் ஆலோசனை வழங்கலாம் . தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னூயிர்க்கெல்லாம் சிறப்பு
சென்னை, ''மூத்த குடிமக்கள் அனைவரும், பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்க வேண்டுமே தவிர, பிறருக்கு பிரச்னையாக இருக்கக் கூடாது,'' என, ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.பி., கருணாநிதி பேசினார். இந்திய அலுவலர்கள் சங்க சிறப்பு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அச்சங்கத்தின் கட்டடத்தில் நேற்று நடந்தது. இதில், 'மூத்த குடிமக்களின் சமூகப் பெறுப்பு' என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.பி., கருணாநிதி பேசியதாவது: மூத்த குடிமக்கள், முதலில் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் இயன்ற செயல்களை செய்ய வேண்டும்; சும்மா இருக்கக் கூடாது. மூத்த குடிமக்கள் அனைவரும் கலாசாரத்தில் வேரூன்றியவர்கள்; அனுபவம் வாய்ந்தவர்கள். உங்களால் நன்றாக எழுத முடியும்; நன்றாக பேச முடியும். வயதானவர்கள் பேச வேண்டும். பேசாமல் அமைதியாக இருப்பதும் ஆபத்து தான். தற்போது, பிள்ளைகள் பெற்றோரை புரிந்து கொள்வது இல்லை. பெரும்பாலான குடும்பங்களில், இந்நிலை தான் நிலவுகிறது. நம் பிள்ளைகளே நம் பேச்சை கேட்கவில்லை எனில், சமூகத்தில் உள்ள பிறர் எப்படி நம் பேச்சை கேட்பர்? நாம் செய்யும் செயல்களுக்கான காரணங்களை உணர்ந்து செய்வது அவசியம். அவ்வாறு தெரியவில்லை என்றால், நாம் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அதாவது, நம்முடைய இத்தனை ஆண்டு கால அனுபவம் பயனில்லாமல் ஆகி விடுகிறது. நம்முடைய செயல்களே நம் அடையாளம். நல்ல மூத்த குடிமக்களை அது பிரதிபலிக்கிறது. மூத்த குடிமக்கள் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். கோபத்தை வெளிப்படுத்தாதீர்; அவசரத்தை தவிர்த்து, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் தவறாக வழிநடத்தக் கூடாது. முக்கியமாக மூத்த குடிமக்கள், பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்க வேண்டுமே தவிர, பிறருக்கு பிரச்னையாக இருக்கக் கூடாது. இவையே மூத்த குடிமக்களின் சமூகப் பொறுப்பாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் மனோகர், 'திருக்குறளும் நாமும்' என்ற தலைப்பில் பேசியதாவது: தினமும் நாம் துாங்குவது, இறப்பிற்கான ஒத்திகை போன்றது தான். நமக்கு யாரேனும் உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். 'தந்தை மகற்காற்றும் உதவி' உட்பட பல குறள்கள், நம் வாழ்வியலின் மேன்மையை போற்றுகின்றன. திருக்குறள் படி வாழ்வோமேயானால், ஒழுக்கத்தோடும், சிறப்பாகவும், முழுமையாகவும் வாழ முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த குடிமக்கள் ஆலோசனை வழங்கலாம் . தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னூயிர்க்கெல்லாம் சிறப்பு