உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்கு மணி நேரம் மின் தடை செங்குன்றம் மக்கள் பரிதவிப்பு

நான்கு மணி நேரம் மின் தடை செங்குன்றம் மக்கள் பரிதவிப்பு

சென்னை:செங்குன்றத்தில் நான்கு மணி நேரத்திற்குமேல் மின் தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை முழுதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, செங்குன்றம் சுற்றுப்பகுதிகளாக வடகரை, அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், மல்லிமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் மாலை 6:00 மணி முதல் நான்கு மணிநேரம் தொடர் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து மின்வாரியத்திற்கு பலரும் புகார் அளிக்க முயன்றனர். ஆனால், உதவிபொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மொபைல்போனை எடுக்கவில்லை; பிஸியாகவே இருந்தது. அலுவலகத்தின் தொலைபேசியும் பிஸியாக இருந்தது. நான்கு மணிநேரத்திற்கு மேல் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அவதியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: விளாங்காடுபாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளுக்கு மேல், ஆங்காங்கே மரக்கிளைகளும், கொடிகளும் படர்ந்துள்ளன. மழை நேரங்களில் அவற்றால், மின்தடை ஏற்படுகிறது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி குடியிருப்பு பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு கேட்டவுடன் மின் இணைப்பை மின்வாரியம் வழங்கி வருகிறது. இதனால், லோடு அதிகமாகி மின்தடை ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மழை நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ