பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஜி.எஸ்.டி., ஊழியர் கைது
நொளம்பூர், திருமங்கலம் பகுதியை சேர்ந்த, 25 வயது பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ், 33, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.திருமணம் செய்வதாக கூறியதை நம்பிய அப்பெண், சதீஷுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை கொடுத்ததாகவும், அவரது குடியிருப்புக்கு சென்று, அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிகிறது.பின், திருமணம் குறித்து கேட்கும் போது, சதீஷ் வாக்குவாதம் செய்து, மறுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என கூறியதோடு, அப்பெண்ணின் மொபைல் போன் எண்ணை பிளாக் செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், சென்ட்ரல் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் பதுங்கி இருந்த சதீஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.அதில், அவர் அண்ணா நகரில் அமைந்துள்ள ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் பணியாற்றி வருவதும், அவருக்கு ஏற்கனவே திருமணமானதும் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.