உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உத்தேச பணி மூப்பு பட்டியல் வெளியீடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எதிர்ப்பு

உத்தேச பணி மூப்பு பட்டியல் வெளியீடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை, சென்னை மாநகராட்சியில் பணி புரியும், 98 சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வை, விகிதாச்சார அடிப்படையை பின்பற்றாமல், உத்தேச பணி மூப்பு பட்டியலாக வெளியிட்டதற்கு, சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கம் சார்பில், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சென்னையில் 98 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள், 15 ஆண்டுக்கு மேலாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு வழங்கும் ஒரே பதவி உயர்வு, சுகாதார அலுவலர் பணியிடம் மட்டுமே. சென்னை உள்ளிட்ட இதர மாநகராட்சிகளில், பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை விகிதாசார அடிப்படையை பின்பற்றாமல், உத்தேச பணி மூப்பு பட்டியலாக வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், மிகவும் ஏமாற்றம் அடைந்ததுடன், பணி நாள் முழுவதும் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொறியியல் பிரிவில் பின்பற்றுவது போல், விதிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கடிதத்தின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் அமலாகி, தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பணி அமைப்பு விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சுகாதார அலுவலர் பதவி இடங்களுக்கு, சென்னை மாநகராட்சி கடைப்பிடித்த விகிதாச்சார முறை, பின்பற்றப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுகாதார அலுவலர் பணியிடங்களை நிரப்பும்போது, அரசாணை எண் 162ன்படி விகிதாச்சார அடிப்படையில், அறிவுரை மற்றும் ஆணை பிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ