பல்லாவரத்தில் ஆக்கிரமிப்பு அறிக்கை கேட்குது ஐகோர்ட்
சென்னை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளில், வெள்ள பாதிப்புகளுக்கு காரணமான மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரிய மனுவுக்கு, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரோம்பேட்டையைச் சேர்ந்த டேவிட் மனோகர் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்தாண்டு பெய்த பருவமழையில், குரோம்பேட்டை, பல்லாவரம், ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் தேங்கியதற்கு, அப்பகுதியில் உள்ள மூன்று மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்புதான் காரணம். இதுகுறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. வடிகால் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கடந்த மாதம் 1ம் தேதி, செங்கல்பட்டு கலெக்டர், தமிழக தலைமை செயலர், நீர்வளத்துறை செயலர் ஆகியோருக்கு அளித்த மனுவை பரிசீலித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜராகி, ''குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளுக்கு செல்லும் கால்வாய் மற்றும் மழை நீர் வடிகால் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தாசில்தார், வி.ஏ.ஓ., உள்ளிட்டோர் உறுதி செய்தனர். இன்னும் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை,'' என்றார். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியது தொடர்பாக, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.