இறந்த டெய்லரின் மனைவியிடம் விசாரணை
சென்னை, வடபழனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, 41; டெய்லர். மனைவி சத்யா, 38, நடத்தையில் சந்தேகமடைந்த மூர்த்தி, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மூர்த்தி, சமையல் அறையில் வைத்திருந்த கத்தரிக்கோலால், தன்னைத்தானே தோள்பட்டையில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.சம்பவ இடத்திற்கு வந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது, அதிக ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வடபழனி உதவி கமிஷனர் ஆனந்தராமன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வந்து பார்த்தபோது, இறந்த நபரின் மூக்கு, வாயில் ரத்தம் வடிந்து இருந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அவரது மனைவியிடம் விசாரிக்கின்றனர்.