பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இடைக்கால இழப்பீடு
சென்னை, அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இடைக்கால இழப்பீட்டு தொகை, நான்கு லட்சம் ரூபாயை, நான்கு வாரங்களில் வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டு வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.அப்போது, 'தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கினார். வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தினார்' என, பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் பேசிய வீடியோ வெளியானது. இதுதொடர்பாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்ததோடு, விசாரணையை அறிக்கையை, வாரம்தோறும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, உயர் நீதிமன்றம் முடிவெடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,'காவல்துறை அலட்சியத்தால், பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் பொது தளத்தில் வெளியாகியுள்ளது. சிறுமி அனுபவித்த துன்பத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, இந்த வழக்கு பொருத்தமானது' என்றனர்.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது' என்று கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், இடைக்கால இழப்பீட்டு தொகையில் மீதமுள்ளதை, நான்கு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். இறுதி இழப்பீட்டை நிர்ணயிக்கும்போது, இடைக்கால இழப்பீடு வழங்கியதை கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.