மாநகராட்சி அதிகாரிகளால் இன்னல்கள் சந்திக்கும் வணிகர்கள்: நீதிபதி வேதனை
திருவொற்றியூர், ''மாநகராட்சி அதிகாரிகளால், வணிகர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்,'' என, தாம்பரம் சார்பு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்கத்தின் 52வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் இரவு, பெரியார் நகர் - தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில், தாம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி வேல்ராஜ் பேசியதாவது: கடந்த 2020ம் ஆண்டிற்கு முன் வரை, மாநகராட்சியால் வணிகர்களுக்கு பிரச்னை இருந்ததில்லை. கொரோனா காலகட்டத்திற்கு பின், கடைகளில் சிறு பிளாஸ்டிக் இருந்தால் கூட, மாநகராட்சி அதிகாரிகள் பெரிய அளவில் 'ரெய்டு' நடத்துகின்றனர். மேலும், 400 ச.அடி., நிலத்தில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு, 'சீல்' வைக்கின்றனர். வரி நோட்டீஸ், சீல் வைப்பு நடவடிக்கையால், தொடர் இன்னல்களை வணிகர்கள் சந்தித்து வருகின்றனர். முதலீடு, உழைப்பு, நஷ்டம் இருந்தும் 'ரிஸ்க்' எடுத்து, வணிகர்கள் தொழில் செய்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், வணிகர்கள் நிலையில் இருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி பேசியதாவது: உற்பத்தியாளர், நுகர்வோரை ஊக்குவிக்கும் சமூக சிந்தனையாளராக வணிகர்கள் உள்ளனர். தற்போது, யாரும் கடைக்கு வந்து பொருட்கள் வாங்குவதில்லை. நினைத்தவுடன் பொருள் கிடைக்க வேண்டும் என, ஆன்லைன் நிறுவனங்களை நாடுகின்றனர். மாறுகின்ற சமுதாயம், கலாசாரத்திற்கு ஏற்ப, வணிக முறையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் வணிகர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இதில், வடசென்னை எம்.பி., கலாநிதி, தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நலவாரிய தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.