நெஞ்சுவலியில் துடித்தவருக்கு உதவிய போலீசாருக்கு பாராட்டு
சென்னை, நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருந்த வாகன ஓட்டியின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீசாருக்கு வெகுமதி அளித்து, துணை கமிஷனர் பாராட்டினார்.துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், கடந்த, 6ம் தேதி ரேடியல் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஒருவர், சாலையில் நெஞ்சு வலியால் துடிப்பதை பார்த்தனர். உடனே, போக்குவரத்து போலீசார் அவரை துாக்கிச் சென்று, அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை மற்றும் இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், நலமடைந்து உள்ளார். சிறப்பாக செயல்பட்டு, இருசக்கர வாகன ஓட்டியின் உயிரை காப்பாற்றிய, எஸ்.ஐ., மற்றும் காவலர்களை, துணை கமிஷனர் பண்டி கங்காதர், நேற்று அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.