போதையில் கார் சாகசம் மாதவரம் வாலிபர் சிக்கினார்
சென்னை,மதுபோதையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், நண்பருடன் காரில் சாகசம் நிகழ்த்திய மாதவரம் வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.பாடி மேம்பாலத்தில் இருந்து, 200 அடி சாலையை நோக்கி, நேற்று முன்தினம் இரவு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக 'கியா' சொகுசு கார் சென்றது. காரை ஓட்டிய வாலிபர், அவ்வழியாக சென்ற சில வாகனங்கள் மீதும் மோதுவது போல் அச்சுறுத்தி சென்றார்.இதனால், அத்திரமடைந்த பொதுமக்கள், காரை விரட்டிச் சென்று ரெட்டேரி அருகில் காரை மடக்கி பிடித்தனர். அப்போது, காருக்குள் இருந்த இரு வாலிபர்களில், காரை இயக்கியவர் பொதுமக்களிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். ரோந்து போலீசார் வாலிபர்களை பிடித்து, வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், காரை இயக்கியவர் மாதவரத்தை சேர்ந்த சதீஷ், 34 என்பதும், கேரளாவை சேர்ந்த நண்பர் குணாலுடன், 34, மது போதையில் வாகனம் ஓட்டி ரகளை செய்ததும் தெரிய வந்தது. காரை பறிமுதல் செய்த போலீசார், சதீஷ் மீது வழக்கு பதிந்து, அபராதம் விதித்தனர்.