துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது
சென்னை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி, 43. இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மைப் பணியாளர். நேற்று முன்தினம் காலை எழும்பூர் காந்தி இர்வின் பாலம் - ஈ.வெ.ரா., சாலை சந்திப்பு அருகே துாய்மை பணி செய்த போது, அவ்வழியாக நடந்து சென்றவரை ஓரமாக போகும் படி லட்சுமி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், லட்சுமியை தாக்கி விட்டு தப்பிச் சென்றார். பின், துாய்மைப் பணியாளர் லட்சுமி அளித்த புகாரின் படி, எழும்பூர் போலீசார், காஷ்மீரைச் சேர்ந்த ரவீந்தர் சிங், 25, என்பவரை கைது செய்தனர்.