ரூ.50 கோடி ஜி.எஸ்.டி., வரி மோசடியில் ஈடுபட்டவர் கைது
சென்னை: தமிழகம், கர்நாடக மாநிலங்களில் சிலர் போலி நிறுவனங்களை துவக்கி, அந்நிறுவனங்கள் வாயிலாக சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே, பல நிறுவனங்களுக்கு போலி ரசீதுகளை வழங்கி ஜி.எஸ்.டி., வரி மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பதிவு செய்யப்படாத வரி ஆலோசனை நிறுவனமான ஏ.எஸ்., அசோசியேட்ஸ் நிறுவனம், 12 போலி நிறுவனங்களின் பெயரில் போலி ஜி.எஸ்.டி., ரசீதுகள், உள்ளீட்டு வரி வழங்கியதன் வாயிலாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தீவிர விசாரணை, தொழில்நுட்ப உதவியுடன் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது ஏ.எஸ்., அசோசியேட்ஸ் நிறுவனத்தை இயக்கும் ஜுனைத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும், போலியாக செயல்படும், 83 நிறுவனங்கள் தொடர்பாக, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.