உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ் விசாரணை முடித்து திரும்பியவர் மயங்கி விழுந்து பலி

போலீஸ் விசாரணை முடித்து திரும்பியவர் மயங்கி விழுந்து பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி காவல் நிலையத்தில் விசாரணை முடித்து வீட்டிற்கு திரும்பியவர், மயங்கி விழுந்து பலியானார். மரணத்திற்கு போலீஸ்தான் காரணம் எனக்கூறி உறவினர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பூந்தமல்லி உப்புக்கொள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 38; ஆட்டோ ஓட்டுநர். இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரிடம் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. இது தொடர்பான புகாரில், பூந்தமல்லி போலீசார், முருகன் மற்றும் அவரது உறவினர் கார்த்திக், 30, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் காலை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். விசாரித்த போலீசார், 10 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என, முருகனிடம் எழுதி வாங்கினர். இரவு, 8:00 மணி வரை வைத்திருந்து அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றபோது, முருகன் திடீரென ஆட்டோவில் மயங்கினார். உடனே, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்றனர். முருகனின் உறவினர்களும் குவிந்தனர். போலீசாரின் ஒரு தலைபட்சமான விசாரணைதான், முருகனின் சாவுக்கு காரணம் என்று கூறி, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்காக முருகனின் சடலத்தை போலீசார் எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமரச பேச்சு நடத்தி, சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, முருகனின் உடல், அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மாரடைப்பால் முருகன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி