ஜெர்மனி பயணிக்க வந்தவர் ஏர்போர்ட்டில் உயிரிழப்பு
சென்னை:சென்னையில் இருந்து ஜெர்மனி நாட்டில் உள்ள பிராங்க் பார்ட் நகருக்கு செல்லும் 'லுப்தான்ஷா ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணியர் விமான நிலைய குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர். இதில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி சிவராமன், 73, என்பவர், தன் மனைவியுடன் பயணம் செய்ய வந்திருந்தார். முனையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுத்திருந்தனர்.பாதுகாப்பு சோதனைக்கு செல்வதற்கு சிவராமன் வராமல், இருக்கையிலேயே அமர்ந்து இருந்துள்ளார். சந்தேகமடைந்த அவரது மனைவி, விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக, மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்தனர். இதில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரிய வந்தது. விரைந்து வந்த சென்னை விமான நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.