மனைவியை மிரட்ட ஆசிட் குடித்தவர் பலி
ஓட்டேரி, ஓட்டேரி, சுப்புராயன் 5வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலகண்ணன், 32; 'ஏசி' மெக்கானிக். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.ஒரு வாரத்திற்கு முன், குடும்ப செலவு தொடர்பாக, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது மது போதையில் இருந்த கமலகண்ணன், மனைவியை மிரட்டுவதற்காக, வீட்டில் கழிப்பறை பயன்பாட்டுக்காக இருந்த ஆசிட்டை ஒரு மூடியில் ஊற்றி குடித்துவிட்டார்.சிகிச்சை எதையும் அவர் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தாய் வீட்டில் தங்கியிருந்த கமலகண்ணன், நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை, கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.