மின்ட் தற்காலிக பேருந்து நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது
பிராட்வே,:பிராட்வே பேருந்து நிலையம் 70 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பேருந்து நிலையம், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், அடிப்படை வசதிகளின்றி படுமோசமாக காட்சியளித்தது.பல்வேறு சிறப்பம்சங்களுடன் புது புது பேருந்து நிலையங்கள் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்கும் நிலையில், பழமையான பிராட்வே பேருந்து நிலையத்தை கண்டுகொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியது.பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, அதே இடத்தில் அதிநவீன வசதிகளுடன், 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.விரைவில் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கும் பணிகள் துவங்க உள்ள நிலையில், ராயபுரம்மேம்பாலம் அருகில்உள்ள 3 ஏக்கர் பரப்பில்,துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில், 7 கோடி ரூபாய் செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தற்காலிக பேருந்து நிலையத்திற்கான இடத்தை சீரமைக்கும் பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. பேருந்து நிலையம் முழுதும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு கன்டெய்னர் பெட்டிகளில், ஆண்களுக்கு 16 கழிப்பறைகளும், பெண்களுக்கு 12 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.டிக்கெட் கவுன்டர்கள், பாலுாட்டும் அறை, முதலுதவி அறை, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வறை, உணவு அருந்தும் அறை உள்ளிட்டவை நான்கு கன்டெய்னர் பெட்டிகளில் அமைய உள்ளன. அனைத்து பணிகளும் விரைவில் முடிந்து, தற்காலிக பேருந்து நிலையம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.