தேசிய மல்லர் கம்பம் போட்டி மும்பை பல்கலை அணி முதலிடம்
சென்னை: பல்கலை மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், மும்பை பல்கலை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்திய பல்கலை சங்கம் மற்றும் விநாயகா மிஷன்ஸ் பவுண்டேஷன் இணைந்து, அகில இந்திய அளவில் அனைத்து பல்கலை மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப் போட்டியை, சென்னையில் உள்ள விநாயகா மிஷன்ஸ் வளாகத்தில் நடத்தினர். இதில், நாட்டின் 70 பல்கலைகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். மூன்று நாட்கள் போட்டியில், நேற்று முன்தினம் இறுதிப்போட்டிகள் நடந்தன. இதில் ஆடவர் பிரிவில் மும்பை பல்கலை, சாவித்ரி பாய் புனே பல்கலை, கர்மவீர் பாட்டீல் சதாரா ஆகிய அணிகள் மோதின. இதில் அசத்திய மும்பை அணி 123.30 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், புனே பல்கலை அணி 121.70 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், சதாரா பல்கலை அணி 120.45 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. மகளிர் பிரிவில் மும்பை பல்கலை அணி 78.55 புள்ளி கள் பெற்று முதல் இடம், புனே பல்கலை 77.55 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம், ரவீந்திரநாத் தாகூர் பல்கலை அணி 77.30 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த மும்பை அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.