காதலனுடன் தங்கிய இளம்பெண் மர்ம மரணம்
சென்னை, காதலனுடன் தங்கியிருந்த இளம்பெண், மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சேலத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 29. இவர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, சினிமா துறையில் இயக்குநராக வாய்ப்பு தேடி வருகிறார். இவரும், 'இன்ஸ்டா'வில் அறிமுகமான ராயப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமி, 26 என்பவரும், காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணேஷின் வீட்டில் லட்சுமி தங்கியுள்ளார். அங்கு, இருவரும் மது அருந்தி சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அப்போது லட்சுமிக்கு வாந்தி வந்துள்ளது. கழிப்பறைக்கு சென்று வாந்தி எடுத்த லட்சுமி, சுயநினைவின்றி மயங்கி விழுந்ததில், நெற்றியில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பரிசோதனையில் லட்சுமி இறந்தது தெரிய வந்தது. அவர்களின் தகவலை அடுத்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு விசாரித்தனர். இதில், லட்சுமிக்கு உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான விபரம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.