வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பணியில் இருக்கும் பணியாளர்களுக்கே சரியான பதில் வழங்கப்படுவதில்லை. ஊக்கத்தொகையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன
உணவு டெலிவரி நிறுவனமான, 'ஸ்விக்கி' வாயிலாக உணவு ஆர்டர் செய்வோருக்கு, அந்நிறுவன ஊழியர்களுக்கு பதிலாக, வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் டெலிவரி செய்வது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் போதிய ஆட்கள் இல்லை என்ற விபரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் உணவு டெலிவரி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக முன்னேறி வருகின்றன. ஆரம்ப காலத்தில் மெட்ரோ நகரங்களை மட்டுமே குறிவைத்து சேவை வழங்கிய உணவு டெலிவரி நிறுவனங்கள், தற்போது குக்கிராமம் வரை சேவை வழங்குகின்றன. குறிப்பாக, 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய பேரிடர் காலத்தில், உணவு டெலிவரி சேவைகளுக்கு மிக அதிகமான தேவை உருவானது. பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்கினர். இதன் வாயிலாக 'ஸ்விக்கி, 'சொமாட்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் மிகுந்த வளர்ச்சியை கண்டன. பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நிறுவன செயலியில் உணவு ஆர்டர் செய்வது, 'இன்ஸ்டாமார்ட்' எனும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை அனுப்புவது போன்ற சேவைகள் வழங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.புகார்
சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும், இந்நிறுவனம் வாயிலாக உணவு டெலிவரி செய்யப்படுகிறது. இருப்பினும், குறித்த நேரத்தில் உணவு வினியோகம் செய்ய முடியாதது, வாடிக்கையாளர் குறைகளை தீர்க்க நேரம் எடுத்துக் கொள்வது போன்றவற்றால், ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் தினமும் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்தால், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எடுத்து வராமல், வேறு நிறுவனங்களை சார்ந்தவர்கள் டெலிவரி செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ராபிடோ உள்ளிட்ட 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களே அதிகம் வினியோகத்திற்கு வருகின்றனர். இதனால், யார் உண்மையில் உணவு டெலிவரி செய்ய வருகின்றனர் என்ற குழப்பமும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.கூடுதல் கட்டணம்
இது குறித்து, ஸ்விக்கி வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 2020ம் ஆண்டில் இருந்து, இந்நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி, உணவு ஆர்டர் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் இருந்த வாடிக்கையாளர் சேவை, தரம் ஆகியவை தற்போது இல்லை. கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது மட்டுமே நோக்கமாக வைத்துள்ளனர். சில தினங்களுக்கு முன் உணவகம் ஒன்றில், உணவு ஆர்டர் செய்து காத்திருந்தேன். பொதுவாக உணவு டெலிவரி செய்யும்போது வரும் நபர்களின் பெயர் செயலியில் காண்பிக்கும்.அவர்களும் அந்நிறுவன 'டீ ஷர்ட்' அணிந்து வருவர். நம் பெயரை உறுதி செய்து பார்சலை தந்துவிட்டு செல்வர். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் முன்பே செலுத்திவிடுவோம். ஆனால், சமீப நாட்களாக சம்பந்தமில்லாத புது நபர்கள் வருகின்றனர். வீட்டின் கீழே சென்று வாங்கும்போது, அவர்கள் நிறுவன, 'டீ ஷர்ட்' அணிந்திருப்பது இல்லை. அடுத்த நாள் ஆர்டர் செய்தபோதும் இப்படியே நடந்தது. இப்படி, சமீப நாட்களாக புதுப்புது நபர்கள் உணவு வினியோகம் செய்வதால், வீட்டில் தனியாக உள்ள பெண்கள், முதியவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பிரபலமாக உள்ள ஸ்விக்கி நிறுவனம் போதிய ஆட்கள் இன்றி வேலை செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. உணவு பதிவுக்கு இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலிக்கும் நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோட்டை விடக்கூடாது. எனவே, ஸ்விக்கி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.அழைப்பு துண்டிப்பு
இது தொடர்பாக, ஸ்விக்கி நிறுவன தலைமை அலுவலகத்தின் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டனர். வாடிக்கையாளர்கள் சேவை அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும், 'உங்கள் புகார்களை இ-மெயிலில் அனுப்புங்கள்' எனக்கூறி, அழைப்பை துண்டித்து விடுகின்றனர். ஸ்விக்கி வினியோக ஊழியர்கள் கூறியதாவது: அரசு அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் தந்துதான், உணவு டெலிவரி நபராக வேலை செய்கிறோம். எங்கள் மீதான புகார் என்றால், நிறுவனத்திடம் தெரிவித்து தீர்வு காணலாம். கடந்த சில மாதங்களாக, பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் வாயிலாக உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி அனுமதித்துள்ளது. செல்லும் வழியில் கிடைக்கும் ஆர்டர்களை பெற்றுக்கொண்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு சென்று தருகின்றனர். அவர்கள் மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க நினைத்தாலும், எளிதாக அது முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதர பிரச்னைகளுக்கு, ஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டால், ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளில் மட்டுமே பதில் அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேவை வழங்கி வருமானம் பார்க்கும் ஒரு நிறுவனம், தாய்மொழியில் வாடிக்கையாளர் சேவை வழங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. வருவாயில் கவனம் செலுத்தும் நிறுவனம், வாடிக்கையாளர்கள் சேவையில் கவனம் செலுத்தவில்லை என, வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பணியில் இருக்கும் பணியாளர்களுக்கே சரியான பதில் வழங்கப்படுவதில்லை. ஊக்கத்தொகையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன