குறுக்கே வந்த மாடு மோதி ஒருவர் பலி
செங்கல்பட்டு, சாலை ஓடி வந்த மாடு மோதியதில், மொபெட் வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். செங்கல்பட்டு அடுத்த, தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலையில், 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாடு ஒன்று குறுக்கே ஓடி வந்து, இவரது மொபெட் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்து ரவி படுகாயமடைந்தார். அவ்வழியே சென்றோர் அவரை மீட்டு, சிங்கபெருமாள் கோவில், பாரேரி பகுதியிலுள்ள அரசு அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளிக்கும்போதே, இரவு 9:00 மணியளவில் ரவி உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.