கனிமங்களை ஏற்றி செல்ல இ - பர்மிட் ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவு
சென்னை:கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு, 'இ - பர்மிட்' உரிமம் பெற, வரும் 28ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு:சென்னையில், மெட்ரோ நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கும் சாதாரண மண், சக்கை கல் எனும் கனிமங்களை அப்புறப்படுத்த உரிமம் வழங்கப்படுகிறது.சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளால், நேரடியாக வழங்கப்பட்ட உரிமச் சீட்டு, வரும் 28ம் தேதி முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பித்து பெற நடைமுறை செய்யப்பட்டுள்ளது.மேலும், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை எடுத்துச் செல்வதற்கான குத்தகை உரிமம் மற்றும் அனுமதிக்கும், 28 முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.குத்தகைக்கு, mimas.tn.gov.in என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களுடன், சுரங்க நிலுவை தொகை சான்றிதலும் சமர்ப்பிக்க வேண்டும்.அனுமதியின்றி எடுத்து செல்லப்படும் கனிமங்கள் மற்றும் அரசால் வழங்கப்பட்ட வழித்தடச் சான்றுகளின் விதிகளை மீறினால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்படுகிறது.