உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்த உத்தரவு

ஆவடி தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்த உத்தரவு

ஆவடி; ஆவடி பேருந்து நிலையம் அவசரகதியில் இடம் மாற்றியதால், அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை பூர்த்தி செய்ய, கிளை மேலாளர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, பக்தவத்சலபுரத்தில் ஆவடி பேருந்து நிலையம் உள்ளது. ஆவடியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 55 வழித்தடங்களில், 221 பேருந்துகள் 1,274 நடைகளாக இயக்கப்பட்டு வருகின்றன. தினம் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் வரும் நிலையில், போதிய வசதிகள் இல்லாத இந்நிலையத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., சார்பில், 36 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 22,000 சதுர அடியில், வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, ஜூன் மாதம் துவங்கியது. தற்காலிக பேருந்து நிலையம் அமைக்காமல், வழக்கமாக செயல்படும் நிலையத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணியர் அவதிப்பட்டனர். இதையடுத்து, ஆவடி பேருந்து நிலையம் எதிரே, 'ஜாக் சிட்டி' எனும் தனியாருக்கு சொந்தமான காலி இடம் சமன் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில், ஆவடி பேருந்து நிலையம் நேற்று மாற்றப்பட்டது. இந்த தற்காலிக நிலையத்தில் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு இல்லாமல், அவசரகதியில் இடமாற்றம் செய்ததால் ஏற்படும் பாதிப்பு குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சென்னை மாநகர போக்குவரத்து பொது மேலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலான அதிகாரிகள், தற்காலிக பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நிலையத்தில் பேருந்து மற்றும் பயணியருக்காக கூரைகள் அமைப்பது, குடிநீர் தொட்டிகள் வைப்பது, கழிப்பறைகளுக்கான தண்ணீர் வசதி ஏற்படுத்தவது உட்பட பல அடிப்படை பிரச்னைகளை உடனே சரிசெய்ய, ஆவடி பேருந்து நிலைய கிளை மேலாளர்களுக்கு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், டிக்கெட் வழங்கும் இயந்திர த்தை 'சார்ஜ்' செய்ய, தற்காலிக பேருந்து நிலையத்தில் போதுமான மின் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, நடத்துநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணியர் கூறியதாவது: தற்காலிக பேருந்து நிலையத்தில், கருங்கல் ஜல்லி கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது. பேருந்து செல்லும் போது, அதன் அழுத்தம் தாங்காமல் கற்கள் தெறித்து விழுவதால் பயணியர் காயமடைகின்றனர். பலத்த மழை பெய்தால், அங்கு கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் நீரில் அடித்துச் சென்று, சேறும், சகதியுமாக மாறும். மழை காலத்தில் வெள்ளம் தேங்கி நிற்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட போக்குவரத்து, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பயணியர் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது. அதேபோல், போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி