உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி - பரங்கிமலை இடையே பொங்கலுக்கு மேம்பால ரயில் சேவை

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பொங்கலுக்கு மேம்பால ரயில் சேவை

சென்னை, 'வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் சேவை, வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால பாதையில், தினமும் 100 சர்வீஸ்களான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை பணிகள், 2008ம் ஆண்டில் துவங்கின. ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், இந்த தடத்தில் 2022ம் ஆண்டுக்கு பின் பணிகள் நடந்தன. தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில், துாண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் திட்டம், 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கிடப்பில் இருந்த ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் இணைப்பு மேம்பால பணி முடிந்துள்ளன. அடுத்தகட்டமாக, ரயில் பாதை, சிக்னல் அமைக்கும் பணிகளும், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ரயில் நிலைய பணிகளும் முடியும் நிலையில் இருக்கின்றன. எஞ்சியுள்ள பணிகள் இரண்டு மாதங்களில் முடித்து, வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். இந்த இணைப்பு ரயில் சேவை கிடைக்கும்போது, பயணியருக்கு கூடுதல் மின்சார ரயில் சேவை கிடைக்கும். புறநகர் மின்சார ரயில் பயணியர் எண்ணிக்கையில், 20 சதவீதம் வரை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ