போலீசார் பொய் வழக்கு? முதல்வர் வீடு முற்றுகை
சென்னை:சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் சாலையைச் சேர்ந்தவர் விஜயகுமார், 20; விஷால், 18; கார்த்திகேயன், 18; அருண்குமார், 20. இவர்கள் மீது, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. திருவல்லிக்கேணி போலீசார் இவர்களை கைது செய்தனர்.அதேபோல, பல்லவன் சாலையைச் சேர்ந்த, திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ' சி' பிரிவு ரவுடிகளான, காஞ்சி, 24; ராகேஷ்,28; கண்ணன்,21 ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.இவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்க முயற்சிப்பதாக, ஏழு பேரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.உறவினர்கள் 12 பேர், நேற்று காலை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள, முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, மனுக்கள் பெற்று, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், விசாரணையில் உள்ள, தங்கள் உறவினர்களை விடுவிக்காமல், சிறையில் அடைக்க இருப்பதாக தகவல் பரவியதால், நேற்று மாலை, 5:00 மணியளவில், மீண்டும் முதல்வர் வீடு முன் திரண்டனர்.அவர்களில், பல்லவன் சாலையைச் சேர்ந்த ஜீவா, பரமேஸ்வரி என, 13 பேர் இருந்தனர். பரமேஸ்வரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இருந்தார். அவர் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.போலீசார், அவர்களை பிடித்து, தேனாம்பேட்டை முத்தையா தெருவில் உள்ள, சமூக நல கூடத்தில் தங்க வைத்தனர்.