உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை மிரட்டிய புழல் சிறை கைதிகள்

நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரை மிரட்டிய புழல் சிறை கைதிகள்

புழல், புழல் சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் மத்திய சிறையில் இருந்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்திற்கு, கைதிகளுடன் நேற்று முன்தினம் போலீஸ் வாகனம் புறப்பட்டது. அந்த வாகனத்தில், போதை பொருள் வழக்கில் கைதான ரவுடிகளான, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரதீப், 26, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் என்ற ‛ரேடியோ' விஜி, 43, ஆகியோர் உள்ளிட்ட 23 கைதிகள் இருந்தனர். வாகனம் புழல் சிறை வளாகத்தில் இருந்து புறப்பட்டதும், ரவுடிகள் பிரதீப் மற்றும் விஜயகுமார், 'நாங்கள் எவ்வளவு பெரிய ரவுடிகள், குப்பை வண்டியில் எங்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறாயா; உன்னை காலி செய்து விடுவோம்' என, ஆயுதப்படை காவலர் அர்ஜுனனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். உடன் சென்ற மற்ற போலீசாரையும் கண்டமேனிக்கு ஒருமையில் பேசியுள்ளனர். ஒருவழியாக போலீசார் அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், விசாரணை முடித்து மீண்டும் கைதிகளுடன் புழல் சிறைக்கு போலீசார் புறப்பட்டனர். அப்போது மறுபடியும் போலீசாரிடம் ரவுடி பிரதீப், 'மனைவியிடம் ஏன் பேச அனுமதிக்கவில்லை' எனக் கூறி, மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, ஆயுதப்படை காவலர் அர்ஜுனன், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புழல் போலீசார், இருவர் மீதும் 'ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல்' ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பிரதீப் மீது பா.ஜ., பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கு உட்பட 26 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை