வடபழனியில் லலிதா சகஸ்ரநாம பாராயணம்
சென்னை:வடபழனி முருகப் பெருமான் கோவிலில், நவராத்திரி விழா சக்தி கொலு எட்டாம் நாளான நேற்று, 108 பெண்கள் இணைந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். கொலுவை ரசித்த சிறார்களுக்கு மரக்கன்று வழங்கி இயற்கையின் மகத்துவம் குறித்து ஊக்கப்படுத்தப்பட்டனர். சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த, 22ம் தேதி துவங்கி, அக்.,1ம் தேதி வரை,'சக்தி கொலு' எனும் பெயரில் பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. கொலுவில் உற்சவருக்கு தினமும் அந்தந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்படி எட்டாம் நாளான நேற்று அம்பாள் காமாட்சி அம்மன் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, 108 பெண் பக்தர்கள் இணைந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். கொலுவை ரசித்த பக்தர்களுக்கு ஆன்மிக வினாடி வினா நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சிறார்களுக்கு இயற்கையின் மகத்துவம் உணர்த்தும் வகையில் சிறப்பு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதையடுத்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ★★★