மழைநீர் வடிகால் சீரமைப்பால் பகுதிவாசிகள் நிம்மதி
அமைந்தகரை, நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.சென்னை, அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், அமைந்தகரை, பாரதிபுரம் உள்ளது. இங்கு, மொத்தம் நான்கு தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.அமைந்தகரை கூவம் அருகில் உள்ள இக்குடியிருப்பின் இரண்டாவது தெருவில், 40 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் உள்ளது. இதை சீரமைப்பதாகக் கூறி, கடந்த மாதம் மாநகராட்சியினர் உடைத்தனர்.இதனால், பல வீடுகளின் நுழைவாயிலில் பள்ளம் ஏற்பட்டதால், விபத்து அபாயம் நிலவியது.வடிகாலில் தேங்கியுள்ள நீரால் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளதாக, குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், உடைக்கப்பட்ட இந்த மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.