ரோபோடிக் தொழில்நுட்பம் ஸ்ரீ ராமச்சந்திராவில் அறிமுகம்
சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள, நவீன ரோபோடிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், 'டா வின்சி எக்ஸ்.ஐ. அட்வான்ஸ்டு ரோபோடிக் சர்ஜிக்கல் சிஸ்டம்' என்ற ரோபோடிக் தொழில்நுட்ப கருவியின் பயன்பாட்டை துவக்கி வைத்தார். இந்த ரோபோடிக் கருவி, அறுவை சிகிச்சை நிபுணருக்கான கட்டுப்பாட்டு கன்சோல், நோயாளி பக்கத்தில் 3 முதல் 4 ரோபோடிக் கரங்களுடன், கார்ட் மற்றும் 3டி எச்.டி., ஆகிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரின் கை அசைவுகளை உடனுக்குடன் துல்லியமாக பிரதிபலிக்க, 'போர்ஸ் பீட்பேக்' உயர் தொழில்நுட்பம் உள்ளது. இது, புரோஸ்ட்டேட், கருப்பை, கொலோரெக்டல் அறுவை சிகிச்சை மற்றும் இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை, துல்லியமாக செய்வதற்கு பயன்படுகிறது என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம், இணை துணைவேந்தர் மகேஷ் வக்கமுடி, துணைவேந்தர் உமா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.