வாலிபரிடம் செயின் பறித்த ரவுடி கைது
முகப்பேர், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 23 ; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் காலை வீட்டின் வாசலில் நின்றபடி, மொபைல்போனில் பேசிகொண்டிருந்தார்.அப்போது, முகவரி விசாரித்தபடி, அங்கு வந்த நபர், திடீரென, பிரகாஷின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயின் மற்றும் மொபைல்போனை பறித்துள்ளார். சுதாரித்த பிரகாஷ் செயினின் மறுமுனையை பிடித்துள்ளார். இதனால் செயின் அறுந்துள்ளது. பாதி செயின் மற்றும் பொபைல்போனுடன் அந்த நபர் தப்பி சென்றார்.இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளின்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, சரித்திர பதிவேடு குற்றவாளியான பாடி, பெரியார் தெருவைச் சேர்ந்த ரவுடி சுந்தர், 24, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து, அரை சவரன் தங்க செயின், மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.