குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79,000 அபராதம் பெருங்குடியில் 4 சக்கர வாகனம் பறிமுதல்
சென்னை, ''பொது இடங்களில் குப்பை கொட்டியோரிடம், 79,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெருங்குடியில் காலிமனையில் கட்டட கழிவு மற்றும் குப்பை கொட்டிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது'' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறினார்.சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துாய்மை பணிகளுடன் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டுவதற்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இடம் நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உதவி செயற் பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.பொது இடங்கள், சாலைகள், காலி மனைகள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, இக்குழுவினருக்கு 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு காமராஜர் நகரில், ஆறாவது குறுக்கு தெருவில், கட்டட கழிவு மற்றும் குப்பையை ஏற்றி சென்ற வாகனம், காலிமனையில் கொட்டும்போது, அவ்வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில், கண்காணிப்பு குழுவின் வாயிலாக குப்பை கொட்ட நிர்ணயிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் கொட்டியோர் மீது ஒரு வாரத்திற்குள், 79,000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.நீர்நிலைகள், காலி மனைகள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவு கொட்டுவதை தவிர்த்து, மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தாழம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இங்கிருந்து கழிவுநீர் லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீரை, பொது இடங்களில் கொட்டுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையரகம் உத்தரவின்படி, தாழம்பூர் போலீசார் இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வப்போது கழிவுநீர் விடுவோரை எச்சரித்தும் வந்தனர்.இந்த நிலையில், எச்சரிக்கையை மீறி, மீண்டும் பொதுவெளியில் கழிவுநீரை திறந்து விட்டது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் அஜய், 20, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்தனர்.