சென்னை: 'சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில், துாய்மை பணிகளை தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான டெண்டர் நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க.,நகர் மண்டலங்களில், துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. மாநகராட்சி மற்றும் துாய்மை பணியாளர்களிடம் தொழிலாளி, முதலாளி என்ற உறவு இல்லை. அதனால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 11 மண்டலங்களில் ஏற்கனவே துாய்மை பணிகள் தனியாரிடம் தரப்பட்டுள்ளது. தற்போது வரை 16,063 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்களை, ஒப்பந்த நிறு வனங்கள் பாதுகாத்து வருகின்றன. ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், 875 பேருக்கு நியமன உத்தரவுகள் வழங்கியபோதும், 425 பேர் மட்டுமே பணியில் சேர்ந்து உள்ளனர். தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலங்களில், துாய்மை பணிகள் விரைவில் தனியாருக்கு வழங்கப்படும். அதற்கான டெண்டர் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க, உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை டிச., 2க்கு தள்ளி வைத்தனர். தொழிலாளர்கள் உடல்நிலை தினசரி அறிக்கை தர உத்தரவு சென்னை மாநகராட்சியில் துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, துாய்மை பணியாளர்கள் ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி ஆகிய நான்கு பேர், அம்பத்துாரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நான்கு பேரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக, தனியார் மருத்துவமனை டாக்டரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மோசமானால், வேறு நான்கு பேர் உண்ணாவிரதத்தை தொடர்வர் என, உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, நான்கு பேரின் உடல்நிலை குறித்து, தினமும் மாலை 7:00 மணிக்கு, அம்பத்துார் போலீசாருக்கு அறிக்கை அளிக்கும்படி, உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு உத்தரவிட்டார். த.வெ.க., சந்திப்பு அம்பத்துாரில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை சந்தித்த த.வெ.க., பிரமுகர்கள், உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். பின், த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், ''கடந்த, 10 நாட்களாக நான்கு பெண் துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதாவது நேர்ந்தால், அதற்கு முதல்வர் தான் முழு காரணம்,'' என்றார்.