சத்யா - 2025 சாகசம் இன்று துவக்கம்
சென்னை: சென்னையில் உள்ள 'வித்யா சாகர்' என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தில், 3,800க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கல்வி, சமுதாயம் குறித்த புரிதல்கள் சொல்லித் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும், 'சத்யா 2025' எனும் சாகச நிகழ்ச்சி, மதுராந்தகத்தில் உள்ள மையத்தில் நடக்க உள்ளது. இதில், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மலையேறுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளன. வெற்றியாளர்களுக்கு 'சத்யா வெற்றி கோப்பைகளை' சோழமண்டலம் கலை கிராம கலைஞர் நந்தகோபால் வழங்க உள்ளார். நிறைவு நாளான நாளை, தேசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன் மதன் பங்கேற்க உள்ளார்.