சென்னை, செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து, கிண்டி, தி.நகர், பாரிமுனை ஆகிய இடங்களுக்கு, 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஆனால், மேடவாக்கம், தாம்பரம், கிளாம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாம்பரத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு உள்ளது.இதனால், குமரன்நகர், சோழிங்கநல்லுார் சென்று அங்கிருந்து வேறு பேருந்துகளில் செல்ல வேண்டி உள்ளது.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கூட்டம் அதிகமாக இருப்பதால், இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி ஏறி செல்வதில், பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர்.இவர்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து, தாம்பரம், கேளம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு, நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.