உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீனியர் டென்னிஸ்: தமிழக வீரர் ரித்தின் சாம்பியன்

சீனியர் டென்னிஸ்: தமிழக வீரர் ரித்தின் சாம்பியன்

சென்னை:தேசிய சீனியர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ் 'சாம்பியன்' பட்டம் வென்றார். அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து, தேசிய அளவில் இருபாலருக்கான சீனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை, நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் வளாகத்தில் நடத்தின. இதன் ஒற்றையர் பிரிவு போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன. இதில், ஆடவர் பிரிவு இறுதி போட்டியில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ், கர்நாடகாவின் ரிஷி ரெட்டி மோதினர். விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை 6 - 1 என, தன்வசப்படுத்திய ரித்தின், தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6 - 2 என, சுலபமாக கைப்பற்றினார். இதனால், சீனியர் ஒற்றையர் ஆடவருக்கான போட்டியில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !