மின் கம்பம் உடைந்து விழுந்து ஷொமேட்டோ ஊழியர் காயம்
தாம்பரம், வேலுார் மாவட்டம், நாதவனுார் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 23. இவருக்கு திருமணமாகி, பவித்ரா என்ற மனைவியும், 7மாத பெண் குழந்தையும் உள்ளனர்.சூர்யா, கடந்த இரண்டு வாரமாக, மேற்கு தாம்பரம், புலிகொரடு, கன்னடப்பாளையத்தில் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருடன் தங்கி, பிரபல உணவு விநியோக நிறுவனமான, 'ஷொமேட்டோ'வில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு விநியோகம் செய்வதற்காக, மேற்கு தாம்பரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். மேற்கு தாம்பரம், போக்குவத்து காவல் உதவி மையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க காத்திருந்தார்.அப்போது, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தில், தாம்பரம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பம் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அடியோடு உடைந்து, சூர்யா தலையில் விழுந்தது.இதில், படுகாயமடைந்த சூர்யாவை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, ஆபத்தான நிலையில், சூர்யா சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தாம்பரம் மேம்பாலத்தில் உள்ள மின் கம்பங்களில், ஏகப்பட்ட தனியார் கேபிள்கள் கட்டப்பட்டுள்ளன. கேபிள்களை இழுத்து கட்டுவதால், பல மின் கம்பங்கள் வலுவிழந்து, சாய்ந்த நிலையில் உள்ளன.அதுபோன்ற மின் கம்பங்கள், அதிக காற்று அடிக்கும் போது உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. சூர்யா மீது விழுந்த மின் கம்பம், அடியோடு உடைந்துள்ளது. அதனால், இதுபோன்று இன்னும் பல விபத்துகள் ஏற்படும் முன், தனியார் கேபிள்களை அகற்றி, மின் கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.