சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000த்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். உள்நாட்டு விமான சேவைக்கு, 'டி1, டி4' என்ற இரு முனையங்களும், சர்வதேச சேவைக்கு, 'டி2' என்ற முனையமும் செயல்பட்டு வருகிறது.கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருவோர் முனையங்களில் இருந்து வாடகை கார் அல்லது ஒலா, ஊபர் போன்ற செயலி வாயிலாக முன்பதிவு செய்து, உரிய இடங்களுக்கு செல்வது வழக்கம்.இதற்கான, 'பிக் - அப் பாயிண்ட்' பகுதி, டி1 முனையத்திற்கு அருகில் இருந்தது. பயணியர் சிரமமின்றி சென்றனர். ஆனால், கடந்தாண்டு 1 கி.மீ., தொலைவில் உள்ள, 'மல்டி லெவல் கார்' பார்க்கிங் பகுதிக்கு, பிக் - அப் பாயிண்ட் மாற்றப்பட்டது.பயணியர் அங்கு செல்ல வசதியாக, விமான நிலைய ஆணையம், 18 பேட்டரி வாகனங்களை இயக்குகிறது. அதிக உடைமைகளுடன் வரும் பயணியர், வாகனங்களில் ஏறி செல்லும்போது, மற்றவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பேட்டரி வாகனங்களை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, விமான பயணி ஒருவர் கூறியதாவது;டில்லியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தேன். அருகில் இருந்த ப்ரீபெய்டு கவுன்டருக்கு சென்று, முன்பதிவு செய்து பேட்டரி வாகனத்திற்காக காத்திருந்தேன்.முன்வரிசையில் அதிக உடைமைகளுடன் பயணியர் காத்திருந்தனர். மூன்று பேர் ஏறியதும் வாகனம் நிரம்பிவிட்டது. அடுத்து வந்த வாகனத்திலும் இதே நிலை தான். மற்ற வாகனம் சென்று திரும்பி வருவதற்கு, 15 நிமிடங்கள்வரை ஆனது. இதற்கு மேல் காத்திருந்தால் நேரமாகிவிடும் என்பதால், வேறு வழியின்றி, 'ஏ2' நுழைவுவாயிலில் இருந்து, 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' பகுதிக்கு, வெயில் வறுத்தெடுக்கும் சூழலிலும் நடந்து சென்றேன். தனி நபருக்கு இந்த பிரச்சனையென்றால், குடும்பத்துடன் வருபவர்களுக்கு மிக சிரமம். பயணியர் எளிதாக செல்லும் வகையில், பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விமான நிலைய இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதியவர்களுக்கானசிறப்பு அனுமதி மறுப்பு?
விமான நிலைய வருகை பகுதிக்கு, சொந்த கார்களில் சென்று, பயணியரை ஏற்றி செல்ல அனுமதி கிடையாது. இதை மீறும் வாகனங்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. வயது மூத்தவர்கள் மற்றும் கர்ப்பிணியரை, முனையத்தின் நுழைவு வாயில் வரை சென்று ஏற்றி செல்ல சிறப்பு அனுமதியை விமான நிலைய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஆனால், சில தினங்களாக சிறப்பு அனுமதி வாகனங்களை, அதிகாரிகள் உள்ளே அனுமதிப்பது கிடையாது. புகார் அளித்தாலும், விமான நிலைய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.