சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம்
சென்னை, நவ. 21--உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச., 3ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வேப்பேரி மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில், சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் நேற்று துவக்கி வைத்தார். அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள், தொண்டு நிறுவன பள்ளிகள் என, 32 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த, 600 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 12 முதல் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு, கலெக்டர் பரிசுகளை வழங்கினார். போட்டிகளில் சிறப்பு திறன் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.