உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி வெள்ள பாதிப்பை தடுக்க ரயில்வே சாலையில் நீரோட்ட பாதை

வேளச்சேரி வெள்ள பாதிப்பை தடுக்க ரயில்வே சாலையில் நீரோட்ட பாதை

வேளச்சேரி,:கடந்தாண்டு வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, வேளச்சேரியில் மழைநீர் வடிகாலை ஒட்டியுள்ள காலி இடத்தில், நீர்வழிப்பாதை அமைக்கப்படுகிறது. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, 4 அடி அகல வடிகால் உள்ளது. டான்சிநகர், அன்னை இந்திராநகர், தரமணி பகுதியில் இருந்து வடியும் மழைநீர், இந்த வடிகால் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.இந்த வடிகாலின் வடக்கு திசையில், அரசு நிலம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டி விற்பனை செய்தனர். இன்னும் சிலர், மாற்றுப்பாதை இருந்தும் இந்த இடத்தை சாலையாக மாற்றி ஆக்கிரமித்தனர். இது குறித்து, நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் தானாக முன்வந்தும், நீதிமன்றம் உத்தரவின்படியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், 4 அடி அகல வடிகாலின் கொள்ளளவை மீறி மழைநீர் செல்வதால், குடியிருப்பு பகுதி வடிகால்களில் நீரோட்டம் தடைபட்டு, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.கடந்த ஆண்டு பாதிப்பை கருத்தில் கொண்டு, வடிகாலை ஒட்டி உள்ள காலி இடத்தில், நீர்வழிப்பாதை அமைக்கப்படுகிறது. 1 கி.மீ., துாரம் 10 அடி அகலத்தில் அமைப்பதால், வெள்ள பாதிப்பு கணிசமாக குறையும் என, அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், அரசு இடத்தை ஆக்கிரமித்து தனியார் சாலை அமைப்பதும் தடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ