ரசாயனம் கொட்டி மாணவன் காயம் மாநகராட்சி பள்ளி மீது தாய் புகார்
சேத்துப்பட்டு, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் துாய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்ட மாணவன் மீது ரசாயனம் கொட்டியதால் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் மாணவனின் தாய், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார்.சேத்துப்பட்டு, மெக்னிக்கல் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவரது மகன் எட்டாம் வகுப்பு பயில்கிறார்.கடந்த 25ம் தேதி, பள்ளியில் வேதியியல் ஆய்வகம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது ஆய்வகத்தில் இருந்த வேதி ரசாயனங்கள் அடங்கிய பிளாஸ்டிக் டப்பாக்கள், சாக்கு மூட்டையில் எடுத்து வைக்கப்பட்டன.அந்த மூட்டைகளை, பள்ளி கழிப்பறை அருகே உள்ள மரத்தின் கீழ் வைக்கும்படி, பள்ளி ஊழியர்கள் சிலர், அவ்வழியே வந்த எட்டாம் வகுப்பு மாணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.அந்த மாணவன், மூட்டையை துாக்கியபோது, பிளாஸ்டிக் டப்பாக்களில் இருந்த மெதிலீன், ஈயம் ஆகிய ரசாயனங்கள் மாணவனின் உடலில் கொட்டின.இதில் சிறுவனின் இடுப்பு, வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.மாநகராட்சி பள்ளி நிர்வாகத்திடம் மாணவனின் தாய் சந்தியா கேட்டபோது, அவர்கள் முறையான தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அவர், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியர் மீது, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் சந்தியா கூறியதாவது:என் மகனை, பள்ளியின் துாய்மை பணியாளர் வேலை செய்ய சொல்லியுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போலீசில் புகார் அளித்தேன்.படிக்கும் மாணவனை எப்படி வேலை வாங்க முடியும். என் மகன் காயமடைந்ததற்கு காரணமான உதவி தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.