தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டன.இதில், பூங்கா மருத்துவமனை அருகே கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு அனுமன் குரங்குகள், பிப்., 13ம் தேதி, உணவு வைக்கும்போது, கூண்டுகளில் இருந்து தப்பியோடி, காட்டுப்பகுதிக்கு சென்றன. மூன்று பேர் குழு அமைக்கப்பட்டு, குரங்குகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. குரங்குகள், ஓட்டேரி விரிவு குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இதையடுத்து, மண்ணிவாக்கம், ஓட்டேரி விரிவு, அயஞ்சேரி பகுதிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.குரங்குகள் சுற்றித்திரியும் இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன், மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு அனுமன் குரங்கை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இரண்டாவது குரங்கு சிக்காமல் போக்குகாட்டி வந்தது.இந்த நிலையில், நேற்று காலை அயஞ்சேரி பகுதியில் சுற்றித்திரிந்த அந்த குரங்கு, அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானாகவே சென்று சிக்கியது. இதையடுத்து, பிடிபட்ட இரண்டு குரங்குகளையும், விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில் வைத்து, பராமரித்து வருகின்றனர்.