உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு விழித்தது மாநகராட்சி அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு விழித்தது மாநகராட்சி அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

சென்னை, சென்னை மாநகரம் முழுதும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால், நடக்கக்கூட வழியின்றி பாதாசாரிகள் திணறி வருகின்றனர். இதுவரை ஆக்கிரமிப்பை வேடிக்கை பார்த்து வந்த மாநகராட்சி, திடீரென விழிப்படைந்து, நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பகுதி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், 'நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் - 2014'ன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் சாலையோரம் வியாபாரம் செய்து கொள்ளலாம். ஆனால், தள்ளுவண்டியில் மட்டுமே பொருட்களை வைத்து விற்க வேண்டும்; ஒரே இடத்தல் நிரந்தரமாக கடை அமைத்து இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதரத்திற்கான கடைகள் மட்டுமே, ஒரே இடத்தில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியும். அதன்படி, சென்னை மாநகராட்சியில் மட்டும், 35,558 அனுமதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். ஆனால், மாநகராட்சி எல்லையில் அனுமதியின்றி, நடைபாதைகளை ஆக்கிரமித்து பலரும் இஷ்டம்போல், 'பக்கா'வாக கடைகள் அமைத்துள்ளனர். பாதசாரிகளை பற்றி எல்லாம் எந்த கவலையும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இல்லை. உள்ளூர் கவுன்சிலர்கள் முதல் வட்ட செயலர்கள் வரை தங்கள் நிலைக்கேற்ப, ஏரியாக்களை வளைத்துக் கொண்டு, 'கல்லா' கட்ட துவங்கினர். ஒரு கடைக்கு, மாதம், 2,000 ரூபாய் என துவங்கி, ஏரியாக்களுக்கு ஏற்ப, 10,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்க ஆரம்பித்தனர். இது நல்ல வருவாய் கிடைக்க வழி வகுத்ததால், சென்னை முழுதும் ஆளுங்கட்சியினர், தனி தொழிலாக மாற்றிவிட்டனர். இதன் விளைவு, எல்லா பகுதிகளிலும் திடீர் திடீரென, விதவிதமான பெயர்களில் நடைபாதை கடைகள் புற்றீசலாக உருவாகின. இவற்றால், சென்னையின் நெருக்கடிக்கு மேலும் துாபம் போடுவதாக அமைந்துவிட்டது. பல இடங்களில் வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. மாதம் தோறும் சரியாக ஆளுங்கட்சி பிரமுகர்கள் 'கப்பம்' கட்டுவதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், கண்டும், காணாமல் இருந்து வந்தனர். இது, பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நெருக்கடியாக மாறிவிட்டது; விபத்துகளுக்கும் வழிவகுத்தது. இதனால், மாநகராட்சியையும், போலீசாரையும் பலரும் திட்டத் தீர்த்தனர். இது, அரசுக்கும் கெட்ட பெயராக மாறிவந்தது. நிலைமை சிக்கலாவதை உணர்ந்த மாநகராட்சி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென விழப்படைந்துள்ளது. நடைபாதையை ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைளையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கதுதான். அதே நேரம், இது அறிவிப்போடு நிற்காமல், உண்மையிலேயே நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதாக அமைய வேண்டும்; மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சென்னை மாநகர மக்களின் விருப்பம். அரசியல் தலையீடு இருக்காது இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில், அரசியல்வாதிகள் மற்றும் கவுன்சிலர்கள் தலையிட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மண்டல அளவில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். முதல்வர், அமைச்சர் உத்தரவில் அகற்றப்படுவதால், இடையூறு ஏற்படுத்தும் வகையிலான அரசியல் தலையீடு இருக்காது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வழிமுறைகள் என்ன? * உதவி பொறியாளர்கள், அனுமதிக்கப்பட்ட விற்பனை பகுதிகள் தவிர, மற்ற ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து, அந்த பட்டியலை மண்டல அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் * மாநகராட்சி செயலியில், ஆக்கிரமிப்பு கடை இருப்பிடத்துடன், புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும் * அடையாளம் காணப்பட்ட அடுத்த நாளில், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் * ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால், போலீசாரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் * ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின், முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களை மாநகராட்சி செயலியில் பதிவேற்ற வேண்டும் * ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான தினசரி அறிக்கையை, வடக்கு வட்டார துணை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும் * ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீசார் மீது என்ன நடவடிக்கை? சென்னையில் பல இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளுக்கு போலீசார் உடந்தையாக இருந்து வருகின்றனர். மாதம் தோறும் கப்பம் கிடைப்பதே இதற்கு காரணம். தற்போது, மீண்டும் ஆக்கிரமிப்பு வந்தால், போலீஸ் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது மாநகராட்சி. ஆனால், போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துவிட்டால் நடவடிக்கை எடுப்பது சிரமமாகிவிடும். போலீசார் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வி எழுகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண், இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 07, 2025 17:56

இன்றைக்கு சென்னை உட்பட தமிழகம் முழு சிறு நகரங்களில் கூட ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. பொதுமக்கள் நடக்கக்கூட இடமில்லாமல் சாலையின் இருபுறங்களையும் அரசியல்வாதிகளின் பினாமிகள் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து நடு ரோட்டில்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் எந்த தப்பும் செய்யாமல் உயிரிழக்கும் அப்பாவிகள் அதிகம்.குறிப்பாக கூடுவாஞ்சேரி பகுதியில் மக்கள் நடந்து செல்வதற்கு இடமில்லை. இருபுறமும் உள்ள நான்கு வழி சாலையில் ஒரு வழி முழுதும் கடைகளின் முன்புறங்களை இழுத்தும், மற்றவர்களும் ஆக்கிரமித்துள்ளன. இரண்டாவது வழி சாலையை கார்கள் , ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளன. மூன்றாவது வழி சாலையில்தான் பொதுமக்கள் நடக்க முடியும். வேறு வழியில்லை. இதை எங்கே கொண்டுபோய் சொல்வது? அரசியல்வாதிகள் சுகமாக வாழ பொதுமக்கள் ரோட்டில் அடிபட்டு சாக வேண்டுமா? ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு இதுதான் தண்டனை.


Kannan
அக் 07, 2025 17:32

பாண்டி பஜார் வந்து பாருங்கள். நடைபாதையில் இரு வீலர்கள் அவர்கள் இஷ்டப்படி ஓட்டுகிறார்கள். நடக்கவிடாமல் திடீர் திடீர் என குறுக்கே வருகிறார்கள். வயதான நடைவாசிகள் படும் சிரமம் மிக அதிகம். இத்தனைக்கும், கூப்பிடு தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.


Indhuindian
அக் 07, 2025 17:29

இதுதான் டபுள் டமாக்கா இந்த மாதிரி ஆக்கிரமருப்புகளையெல்லாம் அகற்ருவோம்ன்னு ஒரு அறிக்கை வுட்டுடவேண்டியது அதுவும் இப்போ தீவாளி நேரம் இல்லையா கூட்டி கசிச்சி பாருங்க கணக்கு சரியா இருக்கும். இந்த மாதிரி அறிவிப்பு குடுத்தபின்தான் மேலும் ஆக்கிரமுப்பு வரும் இப்ப பாருங்க வரிசையா நிப்பாங்க


A.Gomathinayagam
அக் 07, 2025 14:09

சாலிகிராமம் ஆற்காட் சாலை என்பது அடி சிக்னல் இருந்து வடபழனி பேருந்து நிலையம் வரை இடது பக்க நடைபாதை பெரும்பாலான இடங்களில் கிடையாது ,சாலையில் தான் சிறுவர்கள் மகளிர் மூத்த குடி மக்கள் உயிர் பயத்துடன் நடக்க வேண்டிய நிலை .சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி வேறு பயமுறுத்தும், ,விதிகளை மீறி எதிரே வரும் இரு சக்கர வாகனங்கள் மேலும் பயமுறுத்தும்


MUTHU
அக் 07, 2025 09:26

சட்ட ரீதியான நடவடிக்கை. ரைட்டு. சட்ட மேதாவிகள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்திரவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு செந்தில் பாலாஜி கேஸ் விசாரிக்கவே நேரமில்லை.


Indhuindian
அக் 07, 2025 08:14

வாங்க சார் வாங்க இங்கே வெங்கட்நாராயணா ரோட்டுக்கு வாங்க நடைபாதை எங்கே இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சி குடுங்க பாக்கலாம். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பூக்கடை. ஒன்னு பாத்தாகி இப்போ நூறு கடையாயிடுச்சி. ஏதாவது விசேஷ நாட்கள்ல பக்தர்களை வரிசையில் நிக்க வைக்க ரோடுலேதான் கட்டை கட்டறாங்க அது போதாதுன்னு கார்லே போறவங்க கோயிலுக்கு எதிரேதான் வந்து இரங்குவாங்க அதனால நடு ரோட்டுல வரிசாயா நிக்குது பின்னாடி வர மாநரக பேருந்துகளோட ஆரன் சத்தம் காதை துளைக்குது இதெயெல்லாம் சரி பண்ண முடியுமா பாருங்க. அதே மாதிரி ஞாயிற்றுகிழமை அன்னிக்கு சைதை பாலத்துலே ரெண்டு பக்கமும் நிக்கற கார்கலை அப்புறப்படுத்த முடியுமா அது என்ன கார் பார்க்கிங்கா? இதெல்லாம் சும்மா பேப்பர்ல வேணா போடலாம் நடைமுறைக்கு ஒத்து வராது.


Prasad VV
அக் 07, 2025 08:01

அனுமதிக்கப்பட்ட சாலைகள் ஒரு குறிப்பிட்ட அளவு அகலம் உள்ள சாலைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அந்தந்த சாலை மற்றும் நடைபாதை அகலம் சாலை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும். கடைகள் நடைபாதையில் போடக்கூடாது. தள்ளு வண்டியானாலும் ஒரே இடத்தில நிரந்தரமாக நிறுத்தப்பட கூடாது. சாலை பணிகள் நடக்கும்போது, கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளை கவுன்சிலர், போலீஸ், போக்குவரத்து மற்றும் வருவாய்துறை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.


Bakthavachalam G
அக் 07, 2025 22:41

குரோம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சட்ட விரோத வாகன நிறுத்தங்கள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத தாம்பரம் மாநகராட்சி மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை காரணங்கள் பலவிதமாக சொல்லப்படுகின்றன 1 ஒரு சில உள்ளூர் அரசியல்வாதிகள் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களை கண்டுகொள்ள கூடாது என்று மறைமுகமாக போக்குவரத்து காவல் துறைக்கும் தாம்பரம் மாநகராட்சிக்கும் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் கருத்தாக உள்ளது 2 போக்குவரத்து காவல் துறைக்கும் தாம்பரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்களுக்கும் இடைத்தரகர்கள் மூலமாக கரன்சிகள் கைமாறும் காரணத்தால் சட்ட விரோத வாகன நிறுத்தங்களைகண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றன


Mani . V
அக் 07, 2025 05:05

ஓ, மாநகராட்சி அதிகாரிகளின் தீபாவளி வசூல் வேட்டை ஆரம்பமா? எஞ்ஜாய்.


முக்கிய வீடியோ