தப்பிக்க முயன்ற வழிப்பறி திருடனுக்கு மாவுக்கட்டு
சென்னை;போலீசாரிடம் இருந்து தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்த வழிப்பறி திருடனுக்கு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. அயனாவரம், ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 60; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 23ம் தேதி இரவு சவாரி முடித்து, அரும்பாக்கம் கே.எச்., சாலையில் தேவி ஸ்டூடியோ அருகே நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், செல்வத்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் மறுக்கவே, பிளேடால் செல்வத்தின் வலது கையில் வெட்டி, 750 ரூபாயை பறித்து தப்பினார். இது குறித்த புகாரையடுத்து, அயனாவரம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது அயனாவரம் மதுரை தெருவைச் சேர்ந்த மதன் குமார், 34 என, தெரிய வந்தது. இவர், அயனாவரம் ஆவின் ஹைடெக் பாலக கட்டடத்தின் மேல் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீ சார் சுற்றிவளைப்பதை அறிந்த மதன்குமார், தப்பிக்க கட்டடத்தின் மேல் இருந்து குதித்தார். இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்த பின், போலீசார் அவரை கைது செய்தனர்.