உறவினரின் ரூ.4 கோடி நிலம் அபகரித்த மூன்று பேர் கைது
சென்னை: சாலிகிராமத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு இடங்களை அபகரித்த வழக்கில், உறவினர்கள் மூவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சாலிகிராமம், முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான், 33. அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: என் பெற்றோருக்கு, சாலிகிராமத்தில் இரண்டு தெருக்களில், 2,280 சதுரடியில் கட்டடத்துடன் கூடிய இடம் உள்ளது. பெற்றோர் இறந்த பின், அந்த இடத்தை, சித்தப்பா முகமது காசிம், அத்தை சரிபா பானு, சித்தப்பா மகன் பீர் முகமது ஆகியோர், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்துள்ளனர். நான், 80 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். 4 கோடி ரூபாய் மதிப்பிலான தன் சொத்தை அபகரித்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட சாலிகிராமத்தை சேர்ந்த முகமது காசிம், 54, சரிபா பானு, 41, பீர் முகமது, 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.